யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, ஒரே தாயின் மகள்களாகிய இரண்டு பெண்கள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது. அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, மகன்களையும் மகள்களையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாகும். அகோலாள் என்னுடையவளாக இருக்கும்போது விபசாரியானாள். சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து, அசீரியர்களில் தலைசிறந்தவர்களான அனைவரோடும், தான் ஆசைவைத்த அனைவரோடும் தன்னுடைய விபசாரத்தை நடப்பித்து, அவர்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளாலும் தீட்டுப்பட்டுப்போனாள். தான் எகிப்திலே செய்த விபசாரத்தை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளுடன் உடல் உறவு கொண்டு, அவளுடைய கன்னிமையின் முலைக்காம்புகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்களுடைய விபசாரத்தை நடப்பித்தார்கள். ஆகையால் அவளுடைய சிநேகிதர்களின் கையிலே, அவள் ஆசைகொண்டிருந்த அசீரியர்களின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய மகன்களையும் அவளுடைய மகள்களையும் சிறைபிடித்து, அவளையோ வாளினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் தண்டனைகள் செய்யப்பட்டபடியால் பெண்களுக்குள் அவமதிக்கப்பட்டாள். அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன்னுடைய மோகவிகாரத்தில் அவளைவிட கெட்டவளானாள்; தன்னுடைய சகோதரியின் விபசாரங்களிலும் தன்னுடைய விபசாரங்கள் அதிகமானது. மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள். அவளும் அசுத்தமானாள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்கள் என்றும் கண்டேன். அவள் தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்தாள்; சுவரில் சிவப்பு நிறத்தால் வரையப்பட்ட கல்தேய ஆண்களின் உருவங்களைக் கண்டாள். அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள். அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் ஆசைவைத்து, கல்தேயாவுக்கு அவர்கள் அருகிலே தூதுவர்களை அனுப்பினாள். அப்பொழுது பாபிலோனியர்கள் அவள் அருகிலே வந்து காமத்திற்கு, தங்களுடைய விபசாரத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவளுடைய மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. இவ்விதமாக அவள் தன்னுடைய விபசாரங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என்னுடைய மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. அவள் எகிப்துதேசத்திலே விபசாரம்செய்த தன்னுடைய வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்துப்போனாள். கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.