24 – குடும்பம்

இவை சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த வார்த்தைகள்.
மனிதர்களின் வார்த்தைகளில் நமக்கு அக்கறை இல்லை.
கடவுளை நேசிக்கும் எவருக்கும்... இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: குடும்பம்.

முதல் 3 மிக முக்கியமான வசனங்கள்

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,

இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது. உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது. தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.

நியமன வரிசையில் ஒவ்வொரு வசனமும் - 302 பத்திகள்

தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.

பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார். தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது. அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான்.

இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள். ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

அதற்கு ஆதாம்: “என்னுடன் இருப்பதற்காக தேவரீர் தந்த பெண்ணே, அந்த மரத்தின் பழத்தை எனக்குக் கொடுத்தாள், நான் சாப்பிட்டேன்” என்றான். அப்பொழுது தேவனாகிய யெகோவா பெண்ணை நோக்கி: “நீ ஏன் இப்படிச் செய்தாய் என்றார். அந்தப் பெண்: “பாம்பு என்னை ஏமாற்றியது, நான் சாப்பிட்டேன்” என்றாள்.

உனக்கும் பெண்ணுக்கும், உன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார். அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ உன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி உன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.

ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் உயிருள்ள அனைவருக்கும் தாயானவள்.

ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார். காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது. அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார். காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான். யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான். அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.

ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.

ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.

மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:

யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

பின்பு தேவன் நோவாவையும், அவனுடைய மகன்களையும் ஆசீர்வதித்து: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

யெகோவா ஆபிராமை நோக்கி: “நீ உன் பிறந்த தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ. நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார்.

“நான் உன்னுடன் செய்கிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான தேசங்களுக்குத் தகப்பனாவாய். இனி உன் பெயர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான தேசங்களுக்குத் தகப்பனாக ஏற்படுத்தியதால், உன் பெயர் ஆபிரகாம் எனப்படும். உன்னை மிகவும் அதிகமாகப் பலுகச்செய்து, உன்னிலே தேசங்களை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருப்பதற்காக எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலை முறை தலை முறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக நிலைப்படுத்துவேன்.

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: “உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழைக்காதே; சாராள் என்பது அவளுக்குப் பெயராக இருக்கும். நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு மகனையும் தருவேன்; அவள் தேசங்களுக்குத் தாயாகவும், அவளாலே தேசங்களின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து: “100 வயதானவனுக்குக் குழந்தை பிறக்குமோ? 90 வயதான சாராள் குழந்தை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,

யெகோவா ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றுவதற்காக அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, யெகோவாவுடைய வழியைக் கைக்கொண்டு நடக்கவேண்டுமென்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன்” என்றார்.

யெகோவா தாம் சொல்லியிருந்தபடி சாராளைக் கண்ணோக்கினார்; யெகோவா தாம் வாக்களித்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம் முதிர்வயதாக இருக்கும்போது, சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்தில் அவனுக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆபிரகாம் தனக்கு சாராள் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.

அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: “உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன்” என்றான். அதற்கு லாபான்: “நான் அவளை வேறொருவனுக்குக் கொடுக்கிறதைவிட, அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தங்கியிரு” என்றான். அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான்; அவள் மேலிருந்த பிரியத்தினாலே அந்த வருடங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.

ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள். அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபமடைந்து: “தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா?” என்றான்.

யெகோவா யாக்கோபை நோக்கி: “உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடுகூட இருப்பேன்” என்றார்.

அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: “உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்”.

அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். யோசேப்பு தன் சகோதரர்களைப்பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு முன்பாகக் கலக்கமடைந்திருந்ததினாலே, அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் இருந்தார்கள்.

யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவனுடைய கழுத்தை விடாமல் அழுதான்.

பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.

நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன்.

உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.

“தன்னுடைய தகப்பனையாவது தன்னுடைய தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.

விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;

ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார்.

அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.

உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

“உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

“தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும் திருமணம் செய்யக்கூடாது; தன் கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது.

கன்னியாக இருக்கிற பெண்ணை அவன் திருமணம்செய்யவேண்டும். விதவையையானாலும் விவாகரத்து செய்யப்பட்டவளையானாலும் கற்புக்குலைந்தவளையானாலும் வேசியையானாலும் திருமணம்செய்யாமல், தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத் திருமணம்செய்யக்கடவன்.

“ஒரு பெண் தன்னுடைய கணவனைத்தவிர அந்நிய ஆணோடு சேர்ந்து தீட்டுப்பட்டதால் உண்டான எரிச்சலுக்கும், கணவன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன்னுடைய மனைவியின்மேல் அடைந்த பொறாமைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் யெகோவாவுடைய சந்நிதியில் தன்னுடைய மனைவியை நிறுத்தவேண்டும்; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யவேண்டும். கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல்” என்றார்.

“செலொப்பியாத்தின் மகள்கள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரர்களுக்குள்ளே சொத்து கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சொத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய். மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: ஒருவன் மகன் இல்லாமல் இறந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் மகளுக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்குக் மகளும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும். அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார்.

யெகோவா செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும். இப்படியே இஸ்ரவேல் மக்களின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்திற்குப் போகாமல் இருக்கும்; இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முன்னோர்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும். இஸ்ரவேல் மக்கள் அவரவர் தங்கள்தங்கள் முற்பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் மக்களுடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் மகளும் தன்னுடைய முன்னோரின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும். சுதந்தரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் மக்களுடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.

ஓரேபிலே உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீ நிற்கும்போது, யெகோவா என்னை நோக்கி: “மக்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கச்செய்வேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொன்ன நாளில், உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறக்காமலிருக்கவும், நீ உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவைகள் உன் இருதயத்தைவிட்டு நீங்காமலிருக்கவும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவை கவனமாகக் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிப்பாயாக.

உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருப்பதாக. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குத் தெளிவாகப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,

அவர்களுடன் சம்பந்தம் ஏற்படுத்தக்கூடாது; உன் மகள்களை அவர்கள் மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உன் மகன்களுக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. என்னைப் பின்பற்றாமல், அந்நிய தெய்வங்களை வணங்கும்படி அவர்கள் உன்னுடைய மகன்களை விலகச்செய்வார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும்.

அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயம்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு உணவும் உடையும் கொடுக்கிறவருமாக இருக்கிறார்.

நீங்கள் என் வார்த்தைகளை உங்களுடைய இருதயத்திலும் உங்களுடைய ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,

நீ உன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

உன் பண்டிகையில் நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;

அவனுடைய இருதயம் பின்வாங்கிப் போகாமலிருக்க அவன் அநேகம் மனைவிகளைத் திருமணம் செய்யவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாகப் பெருகச்செய்யவும் வேண்டாம்.

ஒரு பெண்ணைத் தனக்கு நிச்சயம் செய்துகொண்டு, அவளைத் திருமணம்செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் போரிலே இறந்தால் வேறொருவன் அவளைத் திருமணம்செய்ய வேண்டியதாகும் என்று சொல்லவேண்டும்.

“இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும், தகப்பன் தனக்கு உண்டான சொத்தைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு மூத்தமகனின் உரிமையைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கக்கூடாது. வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை மூத்தமகனாக அங்கீகரித்து, தனக்கு உண்டான சொத்துக்களிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பெலன், மூத்தமகனின் உரிமை அவனுக்கே உரியது.

“தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால், அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, அப்பட்டணத்தின் மூப்பர்களிடத்திற்கும், அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: எங்கள் மகனாகிய இவன் அடங்காதவனாக இருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளாமலும்; பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பர்களோடு சொல்லுவார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர்கள் எல்லோரும் அவன்மேல் கல்லெறிவார்களாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைக் கேட்டு பயப்படுவார்கள்.

“ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து: நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள். அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது. அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. “ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.

“வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் யெகோவாவுடைய சபையில் சேர்க்கப்படக்கூடாது.

“ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டபின்பு, அவளிடத்தில் வெட்கக்கேடான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். அந்த இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும், அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே.

“ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக.

தன் தகப்பனையும் தன் தாயையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்வதற்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் மக்களைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும்” என்றான்.

இப்போதும், நான் உங்களுக்கு தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்திற்கு தயவுசெய்வோம் என்று யெகோவாவுடைய நாமத்தில் எனக்கு சத்தியம் செய்து, நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரர்களையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடு வைத்து, எங்களுடைய ஜீவனை சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள்.

காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது யெகோவா குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.

நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால், உங்களுடைய தேவனாகிய யெகோவா இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள்.

யெகோவாவைத் தொழுதுகொள்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாகத் தெரிந்தால், பின்பு யாரைத் தொழுதுகொள்வீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்பால் உங்களுடைய முற்பிதாக்கள் தொழுதுகொண்ட தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நீங்கள் வாழ்கின்ற தேசத்தின் மக்களாகிய எமோரியர்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்வீர்களோ? நானும் என் வீட்டார்களுமோவென்றால், யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றான்.

இஸ்ரவேல் மக்களும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள்.

அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடு பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய மக்கள் என்னுடைய மக்கள்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.

இதுவுமல்லாமல், இறந்தவனுடைய சகோதரர்களுக்குள்ளும், ஊரார்களுக்குள்ளும், அவனுடைய பெயர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்திரத்திலே அவனுடைய பெயரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாக இருந்த மோவாபியப் பெண்ணான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.

அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான்.

சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.

இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்செய்தேன்; நான் யெகோவாவிடத்தில் கேட்ட என்னுடைய விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். எனவே, அவன் யெகோவாவெக்கென்று கேட்கப்பட்டதால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் அவனைக் யெகோவாவுக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே யெகோவாவைத் தொழுதுகொண்டான்.

ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை.

சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.

பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.

நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனிதர்கள் பயன்படுத்தும் பிரம்பினாலும் மனிதர்களுடைய கசையடிகளினாலும் தண்டிப்பேன்.

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் மகளை நேசித்ததுமட்டுமல்லாமல், மோவாபியர்களும், அம்மோனியர்களும், ஏதோமியர்களும், சீதோனியர்களும், ஏத்தியர்களுமாகிய அந்நியர்களான அநேக பெண்கள்மேலும் ஆசைவைத்தான். யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் அவர்களுக்குள்ளும் அவர்கள் உங்களுக்குள்ளும் நுழையக்கூடாது; அவர்கள் நிச்சயமாகத் தங்கள் தெய்வங்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைத் திருப்புவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாக இருந்தான். அவனுக்கு ராஜ பரம்பரையுள்ள 700 மனைவிகளும், 300 மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய பெண்கள் அவனுடைய இருதயத்தைத் திரும்பச்செய்தார்கள். சாலொமோனுக்கு வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களைப் பின்பற்றும்படி திருப்பிவிட்டார்கள்; அதினால் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயம் யெகோவாவிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதைப்போல, சாலொமோனின் இருதயம் தன்னுடைய தேவனாகிய யெகோவாவோடு முழுமையாக அர்ப்பணிக்கப்படவில்லை.

ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.

அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள். இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான். அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

அப்பொழுது அவனுடைய மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்திலே உறுதியாக நிற்கிறீரோ? தேவனை நிந்தித்து உயிரை விடும் என்றாள். அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவம் செய்யவில்லை.

விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட, தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.

மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.

என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை. அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.

இதோ, நான் அநீதியில் உருவானேன்; என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார். தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன். அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.

அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,

மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.

யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.

நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.

உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

தாவீதின் ஆரோகண பாடல். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை. என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.

வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, யெகோவாவை துதியுங்கள். அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்; அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.

என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள், உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.

என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல, யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.

பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும், என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.

என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும். ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி; என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய். அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக; அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.

உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு. அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.

என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.

சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.

தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.

குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.

ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.

நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்; பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.

பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.

புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.

புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.

நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.

மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.

மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.

மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர். வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.

நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.

தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.

பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, அதின் செயலினால் வெளிப்படும்.

தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.

ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.

சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.

பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.

பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என்னுடைய உள்மனம் மகிழும்.

உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே. சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள். என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.

சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.

அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி.

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.

உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.

தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு. தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.

தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.

எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு. அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.

என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, என்னுடைய பொருத்தனைகளின் மகனே, பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.

குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது. அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்; அவனுடைய செல்வம் குறையாது. அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள். ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி, தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள். அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து, தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள். தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள். தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும். தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும். சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள். தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால், தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள். இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை. அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது பெயர் பெற்றவனாக இருக்கிறான். மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது; வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள். தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல், தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள். அவளுடைய பிள்ளைகள் எழும்பி, அவளை பாக்கியவதி என்கிறார்கள்; அவளுடைய கணவன் அவளைப்பார்த்து: அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு; நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான். செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள். அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

தனிமையாக இருப்பதைவிட இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். ஒருவன் விழுந்தால் அவனோடு இருப்பவன் அவனைத் தூக்கிவிடுவான்; தனிமையாக இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராகப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; தனிமையாக இருப்பவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாராவது ஒருவன் தாக்க வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாக அறுந்து போகாது.

சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.

ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை.

நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்.,

சீயோனின் இளம்பெண்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் திருமணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்கு அணிவித்த கிரீடத்துடன் இருக்கிற அவரைப் பாருங்கள்.

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

யெகோவாவே, பிரசவநேரம் நெருங்கியிருக்கும்போது வேதனைப்பட்டு, தன் வேதனையில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம். நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு பாதுகாப்பையும் செய்யமுடியாதிருக்கிறோம்; பூமியில் உள்ள மக்கள் விழுகிறதுமில்லை.

நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.

தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற மக்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் யெகோவா என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கும்போது என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார்.

ஒரு பெண் தன் கர்ப்பத்தின் குழந்தைக்கு இரங்காமல், தன் மகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.

உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். கைவிடப்பட்டு மனம்நொந்தவளான பெண்ணைப்போலவும், இளம்பிராயத்தில் திருமணம்செய்து விவாகரத்து செய்யப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் யெகோவா அழைத்தார் என்று உன் தேவன் சொல்கிறார்.

உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார்.

வாலிபன் கன்னிகையை திருமணம்செய்வதுபோல, உன் மக்கள் உன்னை திருமணம்செய்வார்கள்; மணமகன் மணமகளின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குவதற்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்செய்து, உன்னை தேசங்களுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

ஒருமனிதன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நிய மனிதனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப் போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனிதர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசருடன் வேசித்தனம்செய்தாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று யெகோவா சொல்லுகிறார்.

சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்செய்த காரணங்கள் எல்லாவற்றுக்காகவும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதல் சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்செய்தாள், இதை நான் கண்டேன்.

சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாகத் தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து,

அந்நியதேசத்தாரையும், அனாதையானவனையும், விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த இடத்தில் சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தெய்வங்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த இடத்தில் உங்களைச் சதாகாலமும் குடியிருக்கவும்செய்வேன்.

நீங்கள் பெண்களை திருமணம்செய்து, மகன்களையும் மகள்களையும் பெற்று, உங்கள் மகன்களுக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் மகள்களை ஆண்களுக்குக் கொடுங்கள்; இவர்களும் மகன்களையும் மகள்களையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,

நீ உன்னுடைய இளவயதின் நாட்களை நினைக்காமல், இவைகள் எல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன்னுடைய வழியின் பலனை உன்னுடைய தலையின்மேல் சுமரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன்னுடைய எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய். இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லோரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள்.

பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.

வனாந்திரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்களுடைய பெற்றோர்களின் முறைமைகளில் நடக்காமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.

உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாக நினைத்தார்கள்; உன்னுடைய நடுவில் பரதேசிக்கு இடையூறு செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.

விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் திருமணம்செய்யாமல், இஸ்ரவேல் வீட்டாளாகிய கன்னிகையையோ, ஒரு ஆசாரியரின் மனைவியாக இருந்த விதவையையோ திருமணம்செய்யலாம்.

நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். உண்மையாகவே உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ யெகோவாவை அறிந்துகொள்வாய்.

இந்தச் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்களுடைய பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிப்பார்களாக.

தன் இளவயதின் கணவனுக்காக சணல் ஆடையை அணிந்திருக்கிற பெண்ணைப்போலப் புலம்பும்.

அதற்குப் பின்பு நான் மாம்சமான அனைவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர்கள் தரிசனங்களையும் காண்பார்கள்.

இரண்டுபேர் ஒருமனப்படாமல் இருந்தால் ஒன்றுசேர்ந்து நடந்துபோவார்களோ?

மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமியாருக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனிதனுடைய எதிரிகள் அவன் வீட்டார்தானே.

சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாக நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தன் இருதயத்தில் தீங்கு நினைக்காமலும் இருங்கள் என்றார்.

ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். விவாகரத்தை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் ஆடையை மூடுகிறான் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்செய்யாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

நான் வந்து பூமியை அழிக்காமலிருக்க, அவன் தகப்பன்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய தகப்பன்களிடத்திற்கும் திருப்புவான்.

ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு: ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்; யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்; ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்; உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்; எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான். பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்; செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்; எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.

இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான். அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.

அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பிள்ளையைப் பணிந்துகொண்டு, தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாக வைத்தார்கள்.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால், அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.

உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகவே, பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன். எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே. தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.

இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது.

இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார்.

இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா? இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.

உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே. நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து, உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.

இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.

இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.

அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள்.

அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,

என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;

அவரைப் பார்த்து: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் சிறுவர்களுடைய வாயினாலும் துதி உண்டாகும்படிச் செய்தீர் என்பதை நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா என்றார்.

பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.

ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.

உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து: போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்; மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.

பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.

எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,

அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.

செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இந்த இவருக்கும் இடிமுழக்க மக்கள் என்று அர்த்தம்கொண்ட பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்,

ஒரு வீடு தனக்குத்தானே எதிராகப் பிரிந்து இருந்தால், அந்த வீடு நிலைத்துநிற்காதே.

அப்பொழுது அவருடைய சகோதரர்களும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். அவர்களுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி; தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாக இருக்கிறான் என்றார்.

இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.

எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்; நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.

ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.

என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.

அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள். எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள். அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.

அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடுவதற்காக அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, ஏமாற்றாதே, உன் தகப்பனையும், தாயையும் கனம்பண்ணு என்கிற கட்டளைகளைப்பற்றி தெரிந்திருக்கிறாயே என்றார்.

அதற்கு இயேசு மறுமொழியாக: எனக்காகவும், நற்செய்திப் பணிக்காகவும், வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, குழந்தைகளையாவது, நிலங்களையாவது விட்டு வந்தவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடு நூறுமடங்காக வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. இப்படியிருக்க, ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது. ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள். எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருக்கும்போது திருமணம் செய்வதும், திருமணம்செய்து கொடுப்பதும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் தேவதூதர்களைப்போல இருப்பார்கள். மரித்தவர்கள் உயிரோடு எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று, தேவன் முள்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் புத்தகத்தில் அவனுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?

அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு எதிராகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.

கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான்.

எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும்.

எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.

அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள்.

குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பு நாட்கள் முடிந்தபின்பு, முதலில் பிறக்கும் ஆண்பிள்ளை கர்த்தருக்குப் பரிசுத்தமானது என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி குழந்தையைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பதற்காகவும்,

இயேசுவின் பெற்றோரும் அவரைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் மிகுந்த கவலையோடு உன்னைத் தேடினோம் என்றாள். அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களை செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். ஆனால், அவர் சொன்ன வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களோடுபோய், நாசரேத்தூருக்குச் சென்று, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவருடைய தாயார் இந்த விஷயங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன். நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன். யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன். யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன். லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன். எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன். நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன். யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன். நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன். சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன். ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது. அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள். அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.

உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.

தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் விரோதமாகப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது.

பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான். சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான், அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.

தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபசாரம் செய்கிறான், கணவனாலே விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறான்.

உங்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனம் வருந்தினால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனம் வருந்துகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார்.

பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர்களில் சிலர் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாக இருந்து சந்ததியில்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியைத் திருமணம்செய்து, தன் சகோதரனுக்குச் சந்ததியுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. சகோதரர்கள் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனான். பின்பு இரண்டாம் சகோதரன் அவளைத் திருமணம்செய்து அவனும் சந்ததியில்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனும் அவளை திருமணம் செய்தான். அப்படியே ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து சந்ததியில்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். இவ்விதமாக ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த உலகத்தின் மக்கள் பெண் எடுத்தும் பெண் கொடுத்தும் வருகிறார்கள். மறுமையையும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்குதலையும் அடைய தகுதியானவராக எண்ணப்படுகிறவர்களோ பெண் எடுப்பதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.

மூன்றாம்நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள்.

மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது. அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

இயேசு அவளைப் பார்த்து: நீ போய், உன் கணவனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். அதற்கு அந்த பெண்: எனக்குப் கணவன் இல்லை என்றாள். இயேசு அவளைப் பார்த்து: எனக்குப் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான். எப்படியென்றால், ஐந்து கணவர்கள் உனக்கு இருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு கணவன் இல்லை, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.

உன் மகன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்னதும் அதே நேரம் என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் விசுவாசித்தார்கள்.

இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.

அவர் அப்புறம் போகும்போது பிறவிக் குருடனாகிய ஒரு மனிதனைப் பார்த்தார். அப்பொழுது அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, இவன் குருடனாக பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக: அது இவன் செய்த பாவமும் இல்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமும் இல்லை, தேவனுடைய செயல்கள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு இப்படிப் பிறந்தான்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.

பெண்ணானவளுக்குப் பிரசவநேரம் வரும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளை பெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தான் என்கிற சந்தோஷத்தினால் பின்பு உபத்திரவத்தை நினைக்கமாட்டாள்.

இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாக இருந்த சீடனையும் பார்த்து, தம்முடைய தாயிடம்: “பெண்ணே, அதோ, உன் மகன்” என்றார். பின்பு அந்த சீடனைப் பார்த்து அதோ, உன் தாய் என்றார். அந்தநேரமுதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாக ஏற்றுக்கொண்டான்.

அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;

வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவதற்கான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு சொன்னான்.

அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.

அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.

அது எப்படியென்றால், கணவனையுடைய ஒரு பெண் தன் கணவன் உயிரோடிருக்கும்வரை நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; கணவன் மரித்தபின்பு கணவனைப்பற்றிய பிரமாணத்திலிருந்து விடுதலையாகி இருக்கிறாள். ஆகவே, கணவன் உயிரோடிருக்கும்போது அவள் வேறொரு மனிதனை திருமணம்செய்தால் அவள் விபசாரி என்று சொல்லப்படுவாள்; ஆனால், கணவன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்திலிருந்து விடுதலையானபடியால், வேறொரு மனிதனை திருமணம் செய்தாலும் அவள் விபசாரி இல்லை.

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள். அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.

மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு, அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல, அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.

நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது. ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும். கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யவேண்டும்; அப்படியே மனைவியும் தன் கணவனுக்குச் செய்யவேண்டும். மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையில்லாதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் இருங்கள்; உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாததினால் சாத்தான் உங்களை சோதிக்காதபடிக்கு, மறுபடியும் இணைந்துவாழுங்கள். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், ஆலோசனையாகச் சொல்லுகிறேன். எல்லா மனிதர்களும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆனாலும் அவனவனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அவனவனுக்குரிய வரம் உண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாகவும், மற்றொருவனுக்கு வேறுவிதமாகவும் இருக்கிறது.

திருமணம் செய்யாதவர்களையும், விதவை பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாக இருக்கும். ஆனாலும் அவர்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாதிருந்தால் திருமணம்செய்துகொள்ளக்கடவர்கள்; வேகிறதைவிட திருமணம்செய்கிறது நல்லது. திருமணம்செய்துகொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் கணவனைவிட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.

மற்றவர்களைக்குறித்து கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: ஒரு சகோதரனுடைய மனைவி விசுவாசம் இல்லாதவளாக இருந்தும், அவனுடனே வாழ அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். அப்படியே ஒரு பெண்ணுடைய கணவன் விசுவாசம் இல்லாமலிருந்தும், அவளுடனே இணைந்து வாழ அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனை விவாகரத்து செய்யாமலிருக்கவேண்டும். ஏனென்றால், விசுவாசம் இல்லாத கணவன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; விசுவாசம் இல்லாத மனைவியும் தன் கணவனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்களுடைய பிள்ளைகள் அசுத்தமாக இருக்குமே; இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள். ஆனாலும், விசுவாசம் இல்லாதவர் பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில் சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்கள் இல்லை. சமாதானமாக இருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மனைவியானவளே, நீ உன் கணவனை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ இல்லையோ உனக்கு எப்படித் தெரியும்?

அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆனாலும் நான் உண்மையுள்ளவனாக இருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம் பெற்று, என் கருத்தைத் தெரியப்படுத்துகிறேன். அது என்னவென்றால், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் திருமணம் இல்லாமலிருக்கிறது மனிதனுக்கு நலமாக இருக்குமென்று நினைக்கிறேன். நீ மனைவியோடு இணைக்கப்பட்டிருந்தால், பிரிந்துபோக வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாக இருந்தால். மனைவியைத் தேடாதே. நீ திருமணம் செய்தாலும் பாவமல்ல; கன்னிகை திருமணம் செய்தாலும் பாவமல்ல. ஆனாலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே துன்பப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள்போலவும்,

நீங்கள் கவலை இல்லாதவர்களாக இருக்கவிரும்புகிறேன். திருமணமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். திருமணம் செய்தவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, மனைவியானவளுக்கும், கன்னிப்பெண்ணுக்கும் வித்தியாசமுண்டு. திருமணம் செய்யாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாக இருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; திருமணம் செய்தவள் தன் கணவனுக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாக இருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்த்தரைச் சார்ந்துகொண்டிருக்கவேண்டுமென்றும், உங்களுடைய சொந்த பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.

ஆனாலும் ஒருவன் தன் மகளின் கன்னிப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் திருமணம் செய்யாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் திருமணம் செய்வது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யவேண்டும்; அது பாவமல்ல, திருமணம் செய்யட்டும். ஆனாலும் அதற்கு அவசியத்தைப் பார்க்காமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாகவும், சொந்த விருப்பத்தின்படிசெய்ய அதிகாரம் உள்ளவனாகவும் இருந்து, தன் மகளின் கன்னிப்பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் முடிவுசெய்கிறவன் நன்மை செய்கிறான். இப்படியிருக்க, அவளைத் திருமணம்செய்துகொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடுக்காமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான். மனைவியானவள் தன் கணவன் உயிரோடிருக்கும் காலம்வரை திருமண உடன்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்கிறாள்; தன் கணவன் இறந்தபின்பு தனக்கு விருப்பமானவனாகவும் கர்த்தருக்கு உட்பட்டவனாகவும் இருக்கிற யாரையாவது திருமணம் செய்துகொள்ள விடுதலையாக இருக்கிறாள். ஆனாலும் என்னுடைய கருத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாக இருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவியானவர் உண்டு என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான். ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே. பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள். ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள். ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள். ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை. பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது. பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள். ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும், பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும்.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாக இருக்காது, அயோக்கியமானதைச் செய்யாது, தன்னலத்தைத் தேடாது, கோபமடையாது, தீங்கு நினைக்காது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கும், எல்லாவற்றையும் விசுவாசிக்கும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் சகிக்கும்.

நான் குழந்தையாக இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போல சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் வாலிபனானபோதோ குழந்தைக்குரியவைகளை ஒழித்துவிட்டேன்.

சபைகளில் உங்களுடைய பெண்கள் பேசாமலிருக்கவேண்டும்; பேசுகிறதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை; அவர்கள் அடங்கியிருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், தங்களுடைய கணவரிடத்தில் வீட்டிலே விசாரிக்கட்டும்; பெண்கள் சபையிலே பேசுகிறது அவமானத்தை ஏற்படுத்துகிறதாக இருக்குமே. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்திற்கு மாத்திரமா வந்தது? ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது நினைத்தால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கட்டளைகளென்று அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒருவன் அறியாதவனாக இருந்தால், அவன் அறியாதவனாக இருக்கட்டும்.

அவிசுவாசிகளுடன் இணைக்கப்படாமல் இருங்கள்; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது? தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே. எனவே, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாக இருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருப்பீர்கள் என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை. தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

மேலும் நீங்கள் பிள்ளைகளாக இருக்கிறதினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடுவதற்காக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்களுடைய இருதயங்களில் அனுப்பினார். ஆகவே, இனி நீ அடிமையாக இல்லாமல் அவருடைய பிள்ளையாக இருக்கிறாய்; நீ அவருடைய பிள்ளையென்றால், கிறிஸ்து மூலமாக தேவனுடைய வாரிசாகவும் இருக்கிறாய்.

நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல்,

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார். எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான். தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம். இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.

பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது. உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது. தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.

மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது. பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.

பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;

மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று,

பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல், தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும். உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும். ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும். அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.

முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும், முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு. ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது.

ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து, குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி, முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள். அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது.

நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.

குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.

தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு வாலிபப் பெண்கள் தங்களுடைய கணவர்களிடமும், தங்களுடைய பிள்ளைகளிடமும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.

அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.

அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள். நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ? எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா?

திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.

ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன? அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.

அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது. இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து,

அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”

நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம். ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி?

பிதாவினால் நாம் பெற்ற கட்டளையின்படி உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன்.

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள். அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது. எல்லா தேசங்களையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய குழந்தை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது.

நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே. பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,

ஆவியானவரும் மணமகளும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாக இருக்கிறவன் வரவேண்டும்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

Tamil - தமிழ் - TA

TAMIRV'19 - Tamil Indian Revised Version - 2019

This Bible text is from Tamil Indian Revised Version IRV 2019
https://open.bible/bibles/tamil-bridge-text-bible/
provided by: Bridge Connectivity Solutions Pvt Ltd, available by Creative Commons CC-BY-SA-4.0,
and this new compilation is shared as www.creativecommons.org/licenses/by-sa/4.0.
Languages are made available to you by www.ipedge.net